வாசிக்க நேரம் இருந்தால்..
மரணத்தைக் கண்டு பயப்படுபவரா நீங்கள்? அப்ப அவசியம் இதைப்படிங்க!!!
நான் ஒன்னும் புதுசா எதுவும் சொல்லப்போறதில்லை. எல்லாமே மற்ற மேதைகள், அறிஞர்கள் எல்லோருமே சொன்னதுதான். கொஞ்சம் தூசித்தட்டி, நான் எப்பவும்போல் என் வாழ்வில் நடந்த சில அனுபவங்களையும் சேர்த்து மரணத்தை பற்றி அலசப்போகிறேன்.ஒரு முறை நடிகர் அஜித் ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது."நாமும் மற்ற பொருட்களைபோல்தான். என்ன ஒரு வித்தியாசம், பொருட்களின் மேல் உற்பத்தியான தேதியும், காலாவதியாகும் (expiry date) தேதியையும் குறிப்பிட்டிருப்பார்கள். நமக்கு expiry date மட்டும் தெரியாது, அவ்வளவுதான்".எவ்வளவு உண்மை பாருங்கள். நமக்குத்தான் தெரியாது, ஆனால் நம்மை படைத்தவனுக்கு தெரியும். நான் அடிக்கடி ஒன்றை நினைப்பதுண்டு. நாம் கட்டும் வீடு, கட்டிடங்கள் கூட அதிக வருடம் நிலையாக இருக்கும். ஆனால், நம்மால், அதிக வருடம் வாழ முடியும் என்று யாராவது சொல்லமுடியுமா?சிறு வயதில் மரணம் என்றால் எனக்கு அவ்வளவு பயம். இப்போது பல மரணங்களை பார்த்து மனம் பக்குவப்பட்டு விட்டது. மரணம் மற்ற வீட்டிலோ, வேறு எங்கோ நடந்தால், நம்மை அவ்வளவு பாதிப்பதில்லை. ஆனால், அதே நம் வீட்டில் நடந்தால், நாம் அதிகம் கவலைப்படுகிறோம். ஆனால், நடப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு முறை புத்தரிடம், தன் மகனை பறிக்கொடுத்த ஒரு தாய் கேட்டாளாம், தன் மகனின் உயிரை மீட்டுத்தருமாறு. அதற்கு புத்தர் கூறினாராம், "மரணமே நடக்காத ஒரு வீட்டிலிருந்து ஒரு கவளம் சோறு வாங்கி வா, நான் உன் மகனை நான் மீட்டுத்தருகிறேன்". அவளும் எல்லா இடமும் அலைந்து தேடினாளாம். கடைசி வரை மரணமே இல்லாத வீட்டை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லையாம். அப்போதுதான் அவளுக்கு அந்த உண்மை தெரிந்ததாம். மரணம் எல்லா வீட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அது நம் வீட்டில் மட்டும் நடக்கவில்லை என்ற உண்மை.இன்னொறு கதை. நாம் எல்லாம் அறிந்ததுதான். யாரோரு ஒரு மன்னன், பெயர் நினைவில்லை. அவனுக்கு பாம்பினால்தான் சாவு என்று ஜோசியர் கூற, அவன் அந்த சாவிலிருந்து தப்பிக்க, ஒரு பாதாள அறைக்கு செல்கிறான், அங்கே யாருமே நுழைய முடியாது. அதனால் நாம் தப்பித்துவிடலாம் என நினைக்கிறான். (அப்படி தனியாக வாழ்ந்து, உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்க நினைத்தானோ தெரியவில்லை) கடைசியில் என்ன நடந்தது? யாரோ ஒருவன், மன்னனை பார்க்க பழங்களுடன் வருகிறான். கடைசியில் அந்த பழத்தின் உள்ளே இருந்த பாம்பு ஒன்று அவனைத்தீண்ட உடனே இறந்து போகிறான். இதிலிருந்து என்ன தெரிகிறது, ஆண்டவன் ஆரம்பித்து வைத்துவிட்டு, அவனே முடிவையும் எழுதிவிடுகிறான். யாரும் தப்பமுடியாது.அந்த இடைப்பட்ட நேரத்தில்தான், நாம் பணத்துக்கு, பொருளுக்கு என்று, எல்லாவற்றிற்கும் அலைகிறோம். கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போகிறோம். நாம் எவ்வளவு சம்பாதிதாலும், ஒரளவுதான் சாப்பிட முடியும். பணம் இருப்பதற்காக நிறைய சாப்பிடமுடியுமா என்ன? நீங்கள் 25 வயதில் சாப்பிட்டதை 50 வயதில் சாப்பிட முடியுமா?இந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது:" இளம் வயதில் நிறைய பசிக்கும், எல்லாவற்றையும் சாப்பிட ஆசையா இருக்கும், கையில் பணம் இருக்காது. இப்போது, கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால், எதையும் சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் சொல்கிறார்கள்"இதுதான் வாழ்க்கை. எல்லாமே நல்ல படியாக அமைவது ஒரு சிலருக்குத்தான். அது ஏன் என்பது, ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை எனக்கு காய்ச்சல். எனது குடும்ப டாக்டர் ஊரில் இல்லாததால், வேறு ஒரு டாகடரிடம் சென்றேன். எனக்கு டாக்டர் என்றால் அலர்ஜி. என் குடும்ப டாக்டருக்கு எங்கள் உடம்பை பற்றி நன்கு தெரியும். ஆனால், புது டாக்டருக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. அவரிடம் சென்றவுடன் எனக்கு ஒரே பயம், என்ன சொல்வாரோ, என்ன மருந்து கொடுப்பாரோ என்று. அதையே நினைத்துகொண்டு அவரிடம் சென்றேன்.என்னை பரிசோதித்த அவர், " என்ன இது, உன் இதயம் இப்படி துடிக்கிறது? உனக்கு இதயத்தில் ஏதோ கோளாறு உள்ளது, நீ காய்ச்சல் சரியா போன உடன் வா, உன்னை முழுமையாக பரிசோதிக்க வேண்டும்" என்றார். அவ்வளவுதான், வீட்டிற்கு போய் ஒரே அழுகை, "ஐய்யோ, நான் சாகப்போகிறேன்" என ஒரே புலம்பல். பிறகு என் குடும்ப டாக்டர் வந்தவுடன் அவரிடம் சென்று பரிசொதித்தேன். அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக உள்ளது என்றார். நான் நம்பவில்லை. அதன் பிறகு, என் புடுங்கல் தாங்க முடியாத என் அப்பா, என்னை ஒரு ஸ்பெசலிஸ்டிடம் காண்பித்தார், அவர் முழுமையாக சோதித்து எல்லாம் நார்மல் என்று சொல்லியும் கூட, நான் நார்மல் ஆக ஒரு வருடம் பிடித்தது. ஏன், சாக பயம். இப்போ அந்த பயம் இல்லை. ஏனென்றால், நம்மால், நிச்சயம் மரணம் என்ற அந்த நிகழ்வை தவிர்க்க முடியாது, என்ற உண்மை தெரிந்ததால். இது நடந்து 26 வருடம் ஆகிவிட்டது.எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஒரு முறை நான் ஒரு நோய் தடுப்பு ஊசிபோட டாக்டரிடம் சென்றிருந்தேன். அப்போது ஒரு நண்பரை சந்தித்தேன். அவரிடம் டாக்டரிடம் வந்ததிற்கான காரணத்தை சொல்லிகொண்டிருந்தேன். அவர் கூறியது இன்னும் என் செவிகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிரது." எல்லா வியாதிகளுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டாய். அப்போ நீ சாகவே மாட்டாயா?"" இல்ல அந்த நோய்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாமே என்றுதான்"" சரி, புது நோய் வந்தா என்ன செய்வ?'" அதுக்கும் ஏதாவது ஊசி கண்டுபிடிப்பாங்க" - இது நான்.அதற்குபின் என்னை அவர் கேட்ட கேள்விதான், என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது." எல்லா ஊசியையும் போட்டுட்டா, சாவு வராதா?, ரோட்ல போகும்போது ஆக்ஸிடண்ட் ஆனா, என்ன செய்வ?"எவ்வளவு சத்தியமான உண்மைகள் பாருங்க. அவர் ஒன்றும் தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊசிபோட்டாலும், சாவே நமக்கில்லையென்று நினைக்காதே? அது வரத்தான் செய்யும்.நம்மில் எத்தனை பேர் சாவை வரவேற்போம். யாருமே இருக்கமாட்டார்கள். 90 வயது மனிதனை கேட்டால் கூட, சாவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், நமக்கு மரணத்தை பற்றிய தெளிவு வரவேண்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் தெளிவு படுத்திக்கொண்டால், எந்த குழப்பங்களும் இல்லாமல் சந்தோசமாக வாழலாம்.எனக்கு நன்றாக நினைவு உள்ளது. என் அப்பா மரண படுக்கையில் உள்ளார். ஆனால், வீட்டில் யாருக்கும் தெரியாது அவர் இன்னும் சில நாட்களில் சாகப்போகிறார், என்று. எனக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும். ஆனால், என்று சாகப்போகிறார் என்ற உண்மை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். அதற்காக, என்னால், அங்கேயும், அப்பாக்கூட இருக்க முடியாத சூழ்நிலை. அந்த நேரம் பார்த்து எனக்கு பதவி உயர்வு. நான் என்ன செய்ய? அப்போதுதான் அந்த தெளிவு எனக்குள் உதித்தது. மரணம் என்பது எல்லோருக்கும் பொது. யாராலும் தடுக்க முடியாது. என் அப்பாவிற்கு மட்டும் அது நேரப்போவதில்லை. எல்லோருக்குமே நடக்க போகிறது. என் அப்பாவுக்கு நடக்கப்போவது எனக்கு முன்பே தெரிந்துவிட்டது. அதற்காக எல்லாமே போகப்போகிறது என அங்கே இருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. நாம் இருப்பதால் அவரை காப்பாற்ற முடியும் என்றால், எத்தனை வருடம் வேண்டுமானாலும் அங்கே இருக்கலாம். முடியாத பட்சத்தில் என்ன செய்வது. உலகமும் இயங்க வேண்டுமல்லவா? மனதைக் கல்லாக்கிகொண்டு அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, இனி அவர் இறந்த பிறகுதான் வரபோகிறோம் என்று நன்கு தெரிந்து, மலேசியா வந்த நாளை மறப்பது அவ்வளவு சுலபமா, என்ன?ஆண்டவனோட திருவிளையாடல்ல மரணமும் ஒன்று. ஒரு குடும்பத்துல மனைவி, பிள்ளைகள்னு எல்லா இருப்பாங்க, ஆனா குடும்பத்தலைவன், கணவர் இறந்து போவார்.இன்னொறு வீட்ல,அவருக்குன்னு யாருமே இருக்க மாட்டாங்க, அவர் நோய் நொடியில்லாம ஆரோக்கியமா இருப்பார்? ஏன் இப்படி, அதுதான் ஆண்டவனோட விளையாட்டு.இப்போ எல்லாம், இந்த பிறவில செய்யிர தப்புக்கு இந்த பிறவியிலேயே தண்டனை கிடைக்குது. ஆண்டவன் அடுத்த பிறவி வரையில் காத்திருக்கரது இல்லை.அதே போல இன்னொரு விஷயம். எப்படி சாகறோம் என்பது. இதுல ரெண்டு வகை உண்டு. அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி, தானும் கஷ்டப்பட்டு, இவன் எப்படா போவானு மத்தவங்கள அழ வச்சு சாகறது. இன்னொன்று, வலி இல்லாம, தூக்கத்துல சாகறது. எது உங்களுக்கு இஷ்டம்? இதையும் நாம முடிவு செய்யமுடியாது, ஆண்டவந்தான் முடிவு செய்யணும், ஆனா, அவன் முடிவை மாற்ற நம்மால் முடியும் . எப்படி? கீழ சொன்ன மாதிரி வாழ கத்துக்கங்க:01. அதிகமா ஆசைப்படாம இருக்க கத்துக்கங்க.02. அடுத்தவங்க பொருளை அபகரிக்க நினைக்காதீங்க.03. நல்லது செய்ய முடியாட்டி பரவாயில்ல, கெடுதல் செய்ய நினைக்காதீங்க.04. மனைவிய தவிர மற்ற பெண்களை தாயா, சகோதரியா பாருங்க.05. தனக்கு தேவையானது போக கொஞ்சம் தருமம் செய்ய பழகுங்க.06. எல்லோரையும் மதிக்க பழகுங்க.07. இயற்கைய நேசிங்க, அழிக்காதீங்க.நாம யாரையும் கஷ்டப்படுத்தாம சாகலாம். நான் யாரையும் சாகக்கூப்புடுல. சாவைபத்திய பயத்த போக்கறதுதான் இந்த கட்டுரையோட நோக்கம்.